சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Wednesday, August 09, 2006

பாடல் 54 - இளநீர்

தென்னை மரத்து இளநீரூ -நல்ல
தேன்போல இனிக்கும் சுவைநீரு
என்றும் எங்கும் கிடைத்திடுமே -தினம்
ஏற்றுக் குடித்தால் நலம் தருமே!

பானத்தில் இளநீர் அரியவகை -எந்த
காலமும் நமக்கு நல்ல துணை
விலையோ ஒன்றும் அதிகமில்லை -இங்கு
இதுபோல் பானம் வேறு இல்லை.

இயற்கை தந்தது இளநீரு -நல்ல
இன்சுவை தந்திடும் இளநீரு
உடலின் வெப்பம் தணித்திடுமே -நம்
உள்ளம் தனிலே நிறைந்திடுமே!

கொத்துக் கொத்தாய் காய்த்திடுமே -நம்
அனைவரின் தாகம் தீர்த்திடுமே!
அனைவரும் நாளும் குடித்திடலாம் -வரும்
ஆனந்தம் தனிலே திளைத்திடலாம்!

நன்றி: முத்தமிழ்மன்றம்

Saturday, July 08, 2006

பாடல் 53 - மயிலே குயிலே

மயிலே, மயிலே ஆடிவா
மக்காச் சோளம் தருகிறேன்!
குயிலே, குயிலே பாடிவா
கோவைப் பழங்கள் தருகிறேன்!

பச்சைக் கிளியே பறந்துவா
பழுத்த கொய்யா தருகிறேன்!
சிட்டுக் குருவி நடந்துவா
சட்டை போட்டு விடுகிறேன்!

ஓடைக் கொக்கு இங்கே வா
ஓடிப் பிடித்து ஆடலாம்!
மாடப் புறாவே இறங்கிவா
மடியில் குந்திப் பேசலாம்!

நன்றி: முத்தமிழ் மன்றம்.காம்

Thursday, June 29, 2006

பாடல் 52 - பள்ளிக் கூடம் போகலாமே

பள்ளிக் கூடம் போகலாமே
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாமே
சின்ன பாப்பா!


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சின்ன பாப்பா -கல்வித்
தோட்டம் அந்த பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!


பள்ளிக் கூடம் திறந்தாச்சி
சின்ன பாப்பா -உனக்கு
நல்ல நேரம் பிறந்தாச்சி
சின்ன பாப்பா!


வீட்டுச் செய்தி கதைகள் பேசி
பொழுது போக்கலாம் -அட
ஏட்டுக் கல்வி பாடம் கூட
எழுதிப் பார்க்கலாம்!


உடலும் மனமும் வளர்வதற்கு
சின்ன பாப்பா -ஏற்
இடமே இந்தப் பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!


பள்ளிக் கூடம் போகலாம் வா
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாம் வா
சின்ன பாப்பா!

நன்றி: முத்தமிழ் மன்றம்.காம்

Tuesday, June 20, 2006

பாடல் 51 - ஏழைத்தாயின் தாலாட்டு

முத்துச் சிரிப்பழகா!
முல்லைப்பூ பல்லழகா!

வெத்து குடிசையிலே
விளையாட வந்தாயோ?

ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே

தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ

தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ?

_________________
அன்புடன்.
அபூ முஹை
----------------
மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்த மாட்டார்.

நன்றி: முத்தமிழ்மன்றம்.காம்

Thursday, June 15, 2006

பாடல் 50 - அன்பு தாயின் தாலாட்டு

ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!

தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!

(இத்தாலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)

யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!

_________________
அன்புடன்.
அபூ முஹை
----------------
மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்த மாட்டார்.

நன்றி: முத்தமிழ் மன்றம்

Wednesday, June 14, 2006

பாடல் 49 - எறும்பு

சின்ன சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே !

உன்னைப் போல் நானுமே
உழைத்திடவே வேணுமெ !

ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய் !

நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே !

Monday, June 12, 2006

பாடல் 48 - அழகர் யானை












ஆனை ஆனை
அழகர் ஆனை

அழகரும் சொக்கரும்
ஏறும் ஆனை

கட்டிக்கரும்பை
முறிக்கும் ஆனை

காவேரி தண்ணீரை
கலக்கும் ஆனை

குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்

பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்!