சிறுவர் பாடல்கள்

இணையத்தில் படித்த/கிடைத்த அனைத்து சிறுவர் பாடல்களையும் இங்கே காணலாம். நீங்கள் படித்து பின்னர் உங்க குழந்தைகள் இவற்றை படிக்க, பாட உதவுங்கள். தெரிந்ததை இங்கே கொடுத்தும் உதவுங்கள்.

Friday, January 27, 2006

பாடல் 4 - மனதில் கொள் தம்பி!

மனதில்...
காற்றாய்,
நீயும்-
கலந்திட வேண்டும்!
நாற்றாய்,
நீயும்-
நின்றிட வேண்டும்!
மலராய்,
நீயும்-
மணம் வீசிட வேண்டும்!
தேனாய்,
நீயும்-
இனித்திட வேண்டும்
தென்றலாய்,
நீயும்-
இருந்திட வேண்டும்
மலராய்,
நீயும்-
பூத்திட வேண்டும்
மணமாய்,
நீயும்-
பரவிட வேண்டும்
மனிதனாக,
நீயும்-
உயர்ந்திட வேண்டும்!
மண்னெங்கும்
உன் பெருமையே
பேசப்பட வேண்டும்!
மனதில் கொள் தம்பி!

-இரா.நவமணி

Thursday, January 26, 2006

பாடல் 3 - குயிலே குயிலே

இளங்குயிலே! இளங்குயிலே!
இளம்காலை வாராயோ!-
உன்இன்பமணிக் குரலெடுத்து
ஏழிசையைப் பாடாயோ!

கவிக்குயிலே! கவிக்குயிலே!
கவிச்சோலை வாராயோ!-
உன்கனி அமுதக் குரலெடுத்து
காதலினைப் பாடாயோ!

கருங்குயிலே! கருங்குயிலே!
கருக்கலிலே வாராயோ!-
என்காதினிலே தேன்பாய்ச்ச
காவியங்கள் பாடாயோ!

மாங்குயிலே! மாங்குயிலே!
மாலையிலே வாராயோ!-
உன்மகரயாழ்க் குரலெடுத்து
மனம்குளிரப் பாடாயோ!

பூங்குயிலே! பூங்குயிலே!
பூஞ்சோலை வாராயோ!-
உன்பொங்குமெழில் குரலெடுத்துப்
பூபாளம் பாடாயோ!

தேன்குயிலே! தேன்குயிலே!
தேரேறி வாராயோ!-
உன்தித்திக்கும் குரலெடுத்து
தெம்மாங்குப் பாடாயோ!

-தெ.சாந்தகுமார்.

பாடல் 2 - கல்வி

கல்வி என்பது
கண்களைத் திறப்பது!

கல்லாதிருப்பது
கண்களைத் துறப்பது!

செல்வம் அனைத்திலும்
சிறப்பிடம் வகிப்பது!

இல்லார்க் கெடுத்ததை
இறைப்பினும் மிகுப்பது!

எல்லா இடத்திலும்
ஏற்றம் அளிப்பது!

பொல்லா மடமையைப்
பூண்டோ டொழிப்பது!

அல்லும் பகலும்
அணையா விளக்கது!

கல்லில் பதியும்
கலையா எழுத்தது!

சொல்லில் கனிவு
சுவையைக் குழைப்பது!

வெல்லும் துணிவு
விவேகம் விளைப்பது!
-

தளவை: இளங்குமரன் செங்கற்பட்டு.

பாடல் 1 - இறை வணக்கம்

'ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே'